தேசிய மகளிர் பிரிவு இணையர்களான எம். தீனா – பெர்லி டான் அடுத்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை சீனாவில் நடைபெறும் உபர் கிண்ண பூப்பந்துப் போட்டியில் பங்கேற்பவர்களின் பட்டியலில் இடம்பெறாமல் போகலாம் எனத் தெரிகிறது.
உலகத் தர வரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள அந்த இணையர் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக கூடுதல் நேரம் வழங்குவதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் என மலேசிய பூப்பந்து அகாடமியின் பயிற்றுநர் பிரிவு இயக்குநர் ரெக்ஸி தெரிவித்தார்.
தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்ட பிறகுதான் இது குறித்து முடிவு எடுக்கப்படும். உபர் கிண்ண பூப்பந்து போட்டியிலும் மலேசிய அணிக்கான வாய்ப்புகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
உபர் கிண்ண பூப்பந்துப் போட்டியில் நமது வாய்ப்புகளைக் குறைப்பதாக ஆகி விடாது. நாமும் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை (தீனா – பெர்லி டான்) அப்போட்டியில் பங்கெடுத்து அவர்கள் மட்டுமே வெற்றியைத் தேடித் தந்தால் நாம் 1-4 என்ற புள்ளிக் கணக்கில்தான் தோற்போம் என்றும் ரெக்ஸி சுட்டிக்காட்டினார்.








