டில்லிராணி முத்து
தெலுக் இந்தான், ஜூலை 13 –
தெலுக் இந்தான் மண்ணின் மைந்தர் மாஸ்டர் உகான்தருண் சுகுமாருக்கு சாதனை சுடர்மாமனி எனும் உயரிய விருது வழங்கி குவிக்கப்பட்டது.
பேராக். தெலுக் இந்தான் மட்டுமன்றி தேசிய நிலையில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி மாணவர்களை முன்னிலைப்படுத்தி இளம் சாதனையாளர்களை உருவாக்குவதிலும் பட்டமளிப்பு விழா உட்பட பல்வேறு போட்டிகள், நடவடிக்கைகள் நடத்துவதன் மூலம் அவர்களுக்கான மேன்மையான பல திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவதிலும் ஒரு முன்னுதாரண இளைஞராக திகழ்ந்துவருகிறார் தெலுக் இந்தானின் மண்ணின் மைந்தர் நடன மாஸ்டர் உகான்தருண் சுகுமார்.

சென்னை மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் சென்னை மதுராந்தகம் கே.பி. திருமண மஹாலில் நடைபெற்ற 7ஆம் ஆண்டு முப்பெரும் விழாவில் மாஸ்டர் உகான்தருண் சுகுமாருக்கு இவ்விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் இந்த மாபெரும் விழாவில் மொத்தம் 10 பேருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

இவ்விருதுக்கு மலேசியாவிலிருந்து 5 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் இந்த கலை இலக்கியப் பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த முப்பெரும் கலை இலக்கியப் பெருவிழாவில் மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் டாக்டர் எம்.வரதராஜன், செயலாளர் கவிஞர் தமிழ்ப்பிரியன் ஆகியோர் உகான்தருணுக்கு உயரிய சாதனை சுடர்மாமனி விருது வழங்கி கெளரவித்தனர்.

இவ்விருதிற்காக தம்மை தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டிற்கு வரவழைத்து பெரும் பங்காற்றிய மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் செயலாளர் கவிஞர் தமிழ்ப்பிரியனுக்கு மாஸ்டர் உகான்தருண் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.





















