போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் ஜோகூர் காவல்துறையால் கைது

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத்தில் நேற்று இரவு (டிச.31) நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஜோகூர் காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். அவர்களிடம் இருந்த சுமார் 54,831 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

“ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் தம்போய், தாமான் ஸ்ரீ பஹாகியா ஆகிய இடங்களில் அதிரடி நடவடிக்கை நடத்தப்பட்டது. அப்போது சாம்பல் நிற கார் அவ்விடத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சென்றுகொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர்.

“அந்த காரை அவர்கள் தங்கள் வாகனத்தில் ஜாலான் பெர்சியாரான் அலிஃப் ஹார்மொனி வரை பின்தொடர்ந்தனர். காரைச் சோதனையிட அதிகாரிகள் அணுகியபோது, கார் ஓட்டுநர் காரை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றார். அவர் அபாயகரமான முறையில் காரை ஓட்டினார். இதில் காவல்துறை அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். “கார் மோதியதில் இரு அதிகாரிகளுக்கு கையில் காயம் ஏற்பட்டது,” என்று ஜோகூர் காவல்துறையின் தலைவர் ஆணையர் எம். குமார் தெரிவித்தார்.

அதிவேகமாகச் சென்ற காரைக் காவல்துறையினர் துரத்தியதாகவும் சாலை சுங்கச் சாவடியின் தடுப்பை உடைத்துக்கொண்டு கார் சென்றதாகவும் அவர் சொன்னார்.

ஒருவழியாக அந்த காரில் இருந்தோர் சிம்பாங் ரெங்கத்தில் பிடிபட்டனர் என்றும், காரை 38 வயது சிங்கப்பூர் பெண் ஓட்டியதாகவும் அவருடன் 49 வயது மலேசிய ஆடவர் பயணம் செய்துகொண்டிருந்ததாகவும், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றும், காரில் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

இருவரும் போதைப்பொருள் பாவித்திருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது என்றும், மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here