தம்பி பிள்ளையின் பிறந்த நாளுக்கு செல்லவிருந்த சார்ஜன் எஸ்.பெருமாள் சடலமாக வீடு வந்த துயரம்

கோலாலம்பூர்:

தெலுக் இந்தான் ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாம் சாலையில் அரச மலேசிய போலீஸ் படையின் கலகம் தடுக்கும் படையைச் சேர்ந்த, FRU அதிகாரிகளை உட்படுத்திய கோர விபத்தில் 44 வயதான சார்ஜன் எஸ்.பெருமாள் உட்பட 9 பேர் மரணமடைந்தனர்.

இந்நிலையில் சித்திரா பெளர்ணமி பாதுகாப்பு பணி முடிந்து, இன்று தனது பிள்ளையின் பிறந்த நாளில் பங்குபற்ற இருந்த தனது அண்ணன், இவ்வாறு பாதி வழியிலேயே விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது நெஞ்சை பதற வைக்கிறது என்று, மறைந்த சார்ஜன் எஸ்.பெருமாளின் தம்பி எஸ்.ஹரேந்திரன் கண்ணீர் மல்க கூறினார்.

தனது அண்ணனுக்கு இரண்டு மகள்கள் இருப்பதாகவும், வேலை முடிந்தால் வீட்டிலேயே அவர் நேரத்தை செலவிடுவார் என்றும், பிள்ளைகளை குளிக்க வைத்து சோறூட்டி பாத்துக்குவார் என்றும் கூறிய எஸ்.ஹரேந்திரன், எவ்வாறு அப்பிள்ளைகள் தந்தையின் இழப்பை ஈடுசெய்ய போகின்றனரோ என புலம்பினார்.

தான் தனது சகோதரரை கடந்த சனிக்கிழமை கடைசியாக சந்தித்ததாகவும், விபத்து குறித்து கேள்வியுற்றதும் அவருக்கு பலத்த காயம் மட்டுமே ஏற்பட்டிருக்கலாம் என்று தாம் நினைத்ததாகவும், ஆனால் உயிரிழந்த செய்தி கேட்டதும் தான் மிகுந்த வேதனையடைந்ததாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here