சமூக ஊடகத் தள வழங்குநர்கள் 14,750 கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்

மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட போலி கணக்குகள் மற்றும் பிற மோசடி தொடர்பான உள்ளடக்கங்கள் குறித்து, சமூக ஊடக நிறுவனமான மெட்டா மீது அரசாங்கம் “சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளது” என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

“இந்த போலி கணக்குகளில் பல குறிப்பாக ஃபேஸ்புக்கில் காணப்படுவதால் நாங்கள் மெட்டாவை வரவழைத்துள்ளோம். இருப்பினும் அவை டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களிலும் உள்ளன,” என்று ஃபஹ்மி கூறினார்.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான மெட்டாவைத் தான் கண்டித்ததாகவும், “ஆனால் அவர்கள் மலாய் ஆட்சியாளர்களின் அமைப்புக்கு எந்த மரியாதையையும் காட்டுவதாகத் தெரியவில்லை” என்றும் அவர் கூறினார். மலாய் ஆட்சியாளர்கள் கூட்டாட்சி அரசியலமைப்பில் பொறிக்கப்பட்ட ஒரு மிக முக்கியமான அமைப்பு என்பதையும், பேஸ்புக் போன்ற சர்வதேச தளங்கள் உட்பட அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் மெட்டா புரிந்துகொள்ளத் தவறியது குறித்து அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

சட்ட நடவடிக்கையை நான் கடைசி வழியாகவே கருதுகிறேன். ஆனால் நாங்கள் ஏற்கனவே அதற்கு மிக அருகில் இருக்கிறோம் என்று இன்று மலாக்காவின் ஆயர் கெரோவில் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது உட்பட, தற்போது ஆராயப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஃபஹ்மி கூறினார்.

இந்தச் சட்டம், RM1 மில்லியன் வரை அபராதம், தினசரி RM100,000 அபராதம் மற்றும் RM10 மில்லியன் வரை எட்டக்கூடிய தண்டனைகளுக்கு வழிவகை செய்கிறது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்த 26 உறுப்பினர்களின் பெயர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 15,296 போலி கணக்குகள் அடையாளம் காணப்பட்டதாக நேற்று ஃபஹ்மி கூறினார்.

பயன்படுத்தப்பட்ட பெயர்களில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தெங்கு பெர்மைசூரி ஆகியோர் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here