நெகிரி செம்பிலான் தேர்தல் : 141 விண்ணப்பங்களுக்குப் போலீஸ் அனுமதி! இதுவரை 7 புகார்கள் பதிவு!

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் பிரசார நிகழ்ச்சிகளை நடத்தக் கோரி பெறப்பட்ட 143 விண்ணப்பங்களில் 141 விண்ணப்பங்களுக்குப் போலீஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமது தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 18 முதல் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதே காலகட்டத்தில் தேர்தல் பிரசாரம் தொடர்பில் காவல் துறைக்கு மொத்தம் 7 புகார்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 4 புகார்களுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது: பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இரண்டு வழக்குகள் நேரடித் தேர்தல் குற்றங்களோடு தொடர்புடையவை.

அதேநேரம் கடந்த திங்கட்கிழமை, சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின்கீழ் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 427-இன் கீழ் ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தீ வைத்துச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதாகக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 435-இன் கீழ் மற்றொரு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மாநிலத்தில் இதுவரை பாதுகாப்பு மற்றும் பொது அமைதி நிலைமை மிகவும் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்த டத்தோ அல்சாப்னி அகமது, ஜனநாயக நடைமுறையை மதித்து பொதுமக்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெறக் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here