கோலாலம்பூர்:
பினாங்கு, கொம்தார் அருகே உள்ள ‘லெபோ கர்னார்வோன்’ நோக்கிச் செல்லும் ‘ஜாலான் மெகசின்’ சாலையின் ஒரு பகுதி வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்குக் கட்டம் கட்டமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பினாங்கின் கனவுத் திட்டமான ‘முத்தியாரா லைன்’ (LRT Mutiara Line) திட்டப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதை அடுத்து, உள்கட்டமைப்பு மாற்றியமைப்புப் பணிகளை (Utility Relocation Works) மேற்கொள்வதற்காக இந்தத் தற்காலிகச் சாலை மூடல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை, கப்ரி ஹோட்டல் முதல் தி மெகசின் ஹோட்டல் வரையிலான மூன்று பாதைகள் முற்றிலுமாக மூடப்பட்டு, பினாங்கு நீர் விநியோகக் கழகத்தின் நிலத்தடி குழாய் மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இருப்பினும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இடதுபுறமுள்ள ஒரு பாதை மட்டும் தொடர்ந்து திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
வாகன ஓட்டிகள் ஜாலான் மெகசின் சாலைக்குள் நுழைவதற்கு முன்பாக ஜாலான் மேக்ஸ்வெல் (Jalan Maxwell), லெபோ தெக் சூன் (Lebuh Tek Soon) மற்றும் லெபோ மேக்நயர் (Lebuh McNair) ஆகிய வழிகள் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிகக் கூடுதல் பாதையைப் பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பினாங்கு நீர் வாரியம் (PBAPP) மேற்கொள்ளும் இச்சேவை மாற்றப் பணிகளின் போது, வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறும், போக்குவரத்துச் சமிக்ஞைகள் மற்றும் அங்குள்ள பணியாளர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






















