ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை எதையோ மறைக்க நினைக்கிறது என சுப்ரீம் கோர்ட்டில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்து உள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பனர் தெரிவித்து வந்தனர். இதனால் ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்பல்லோ செவிலியர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரியும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து 21 டாக்டர்கள் அடங்கிய நிபுணர் குழு மூலமாக விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அப்பல்லோ சார்பல் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு தடை கேட்டுள்ள அப்பல்லோ கோரிக்கையில் உள்நோக்கம் உள்ளது. அப்பல்லோ மருத்துவமனை மீது ஏதேனும் தவறு கண்டுபடிக்கப்பட்டு விடுமோ என்பதால், விசாரணைக்கு தடை கோருகின்றனர். ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.