கோலாலம்பூர்
நான்காம் ஆண்டு தமிழ் மற்றும் சீனர் பள்ளி மாணவர்களுக்கு மலாய் மொழிப் பாடத்தில் ஜாவி எழுத்து ஓவியக் கல்வி அமல்படுத்தப்படும் எனும் அமைச்சரவையின் முடிவை எதிர்த்து மலேசிய இந்தியர் கல்வி உருமாற்ற அமைப்பு மறியல் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இந்த மறியல் நாளை இரவு 7 மணிக்கும் மற்றும் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கும் பிரிக்பீல்ட்ஸில் நடைப்பெறவுள்ளது.
புத்ராஜெயாவில், துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங்குடன் நேற்று நடந்த சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு இத்தகவலை, அந்த அமைப்பின் தலைவர் இளங்கோவன் வெளியிட்டார். ஜாவி எழுத்து ஓவியக் கல்வி தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளில் அமல்படுத்தப்படுவதை தடை செய்வதோடு தேசிய ஆரம்பப்பள்ளிகளிலும் இக்கல்வி அறிமுகப்படுத்துவது தடை செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று சீன கல்வி அமைப்புகள், தமிழ் அறவாரியம், புறநகர் மேம்பாட்டுத் துணை அமைச்சர் சிவராசா, பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி ஆகியோருடன் ஜாவி எழுத்துக் கல்வி அமலாக்கம் குறித்து விவாதிக்க அந்தரங்க உரையாடல் ஒன்றை துணைக் கல்வி அமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த உரையாடலில் விவாதிக்கப்படம் கருத்துகள் வெளியே பரவாமல் தடுக்க, சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களின் கைத்தொலைப்பேசிகள் வாங்கி வைக்கப்பட்டன.
இந்த சந்திப்புக் கூட்டம் குறித்து விளக்கமளித்த துணையமமைச்சர் சிவராசா, அமைச்சுக் குறிப்பிட்ட மூன்று பக்க பாடத்திட்டங்கள் குறித்து துணைக் கல்வி அமைச்சர் விளக்கினார் எனக் கூறினார்.
மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னம், பண நோட்டு ஆகியவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ள ஜாவி எழுத்துக்களின் அர்த்தம் என்ன போன்றவை அந்த மூன்று பக்க பாடத்திட்டங்களில் உள்ளடங்கும் என தியோ விளக்கியதாக சிவராசா தெரிவித்தார்.
நாளை நடக்கவிருக்கின்ற மறியல் குறித்து கேட்டபோது, அமைதியான முறையில் மறியலில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு எனக் கூறினார். மேலும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட Dong Zong அமைப்பு நாளை நடக்கவிருக்கின்ற மறியலில் ஈடுபடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிவித்தது.