உலக மல்யுத்தம்: இறுதிப் போட்டிக்கு தீபக்

நூர் சுல்தான் – உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 86 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன் ஒரு ஒலிம்பிக் இடத்தையும் உறுதி செய்தார்.

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அரை இறுதியில், சுவிட்சர்லாந்தின் ஸ்டீபன் ரெய்ச்முத்துடன் நேற்று மோதிய தீபக் பூனியா (20 வயது) 8-2 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இதன் மூலமாக தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ள அவர், இந்தியாவுக்காக ஒரு ஒலிம்பிக் ‘கோட்டா’ இடத்தையும் உறுதி செய்து அசத்தினார்.

இறுதிப் போட்டியில் அவர், 2016 ரியோ ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் ஹாசன் யாஸ்தானிசராட்டியை இன்று எதிர்கொள்கிறார். இந்த தொடரில் இந்தியாவின் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், தீபக் 4வது பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இதுவே இந்திய அணியின் மிகச் சிறந்த செயல்பாடாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here