கோலாலம்பூர்-
ஏர் ஆசியா குழுமத்தின் விமானங்களில் உணவுகளை தருவிக்கும் சந்தான் மற்றும் தி – கோ நிறுவனம் (SANTAN T & CO) அதன் முதல் ஆசியான் விரைவு முதன்மை உணவகத்தை திறந்துள்ளது.
தலைநகர் மிட்வேலி பேரங்காடியில் உள்ள இந்த உணவகத்தின் திறப்பு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்புப் பிரமுகர்களாக உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் நலத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசீத்தியோன், ஏர் ஆசியா குழுமத்தின் இயக்குநர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், ஏர் ஆசியா குழுமத்தின் நிர்வாக தலைவர் டத்தோ கமாரூடின் மெரானுன், சந்தான் மற்றும் தி – கோ நிறுவனத்தின் நிர்வாகி கேத்தரின் கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏர் ஆசியா விமானத்தில் பயணிக்கும் பல நாடுகளை சேர்ந்த மக்களுக்கு விமானத்தில் நாங்கள் தருவித்து தரும் உணவுகள் வெகுவாக கவர்ந்துள்ளன. அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் நேர்மறையான கருத்துக்களை முன்வைத்து இதுவரை உணவை தருவித்த நாங்கள், முதல் முறையாக விரைவு முதன்மை உணவகத்தை திறந்துள்ளோம். விலையும் நியாயமாகவும் கட்டுப்படியாகவும் உள்ளது. இந்த உணவகத்தில் ஆசியான் நாடுகள் குறிப்பாக மலேசியாவைச் சேர்ந்த உணவு வகைகள் தருவிக்கப்படும். இந்த உணவகம் இன்றைய வாடிக்கையாளர்களின் ரசனை – நாவின் ருசிக்கேற்ப நவீனமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு டிஜிட்டல் முறையில் உணவு வகைகளை ஆர்டர் செய்யலாம்.
மேலும் வாடிக்கையாளர்கள் விவேக கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்தும் இந்த உணவகத்தில் உணவுகளை ஆர்டர் செய்யலாம் என கேத்தரின் கோ தெரிவித்தார்.
தற்பொழுது இந்த உணவகத்தில் திறப்பு விழாவை முன்னிட்டு உணவு, தேநீர் – காப்பி வகைகளுக்கு சிறப்பு கழிவு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.