இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டுப் பொருட்களையே வாங்குங்கள்!

புதுடில்லி –

இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நம் நாட்டு இளைஞர்கள் நமது அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றார்.

ஆனால் அது முறையாக இயங்காதபோது ஆவேசமாக கேள்வி கேட்பார்கள். இதை நான் நல்ல விஷயமாக கருதுகிறேன். நமது இளைஞர்கள் அராஜகத்தையும் ஒழுங்கீனத்தையும் ஸ்திரமற்ற தன்மையையும் வெறுக்கிறார்கள். சாதியம், குடும்பத்துக்கு சலுகை காட்டுதல் ஆகியவையும் அவர்களுக்கு பிடிப்பது இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் இளம் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்குமாறு எனது சுதந்திர தின உரையில் வேண்டுகோள் விடுத்தேன். அதை மீண்டும் தெரிவிக்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும். 2022ஆம் ஆண்டு நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதுவரையாவது இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்குவோம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.

உள்நாட்டுத் தயாரிப்புகள், நமது மக்களின் வியர்வை மணம் வீசுபவை. மகாத்மா காந்தி 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பொருட்களையே வாங்க ஊக்கு விக்கும்வகையில் மாபெரும் இயக்கம் தொடங்கினார். அவர் காட்டிய வழியில் நாம் செல்வோம். உள்நாட்டு பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க இளைஞர்கள், சிறு அமைப்புகளை உருவாக்கி மக்களிடையே இதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்
புதிய புத்தாண்டு பிறக்கப் போகிறது.

இது புதிய உறுதியையும் சக்தியையும் உற்சாகத்தையும் அளிக்கட்டும். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. நாட்டு மக்களை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. அதற்கு உறுதி எடுத்துக் கொள்வோம் எனப் பிரதமர் மோடி அந்நிகழ்ச்சியில் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here