கோலாலம்பூர் –
நாட்டின் முக்கியமான 5 நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும். பிளஸ் எனப்படும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, ஷா ஆலம் விரைவுச்சாலை, டாமன் சாரா – பூச்சோங் விரைவுச் சாலை, ஸ்பிரிங் விரைவுச் சாலை, ஸ்மார்ட் சுரங்கப்பாதை ஆகியவையே அந்த ஐந்து நெடுஞ்சாலைகளாகும்.
கடந்தாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் முற்றாக அகற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டுமானால் அரசாங்கம் மிகப்பெரிய தொகையைச் செலவழிக்க நேரிடும் என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது நிதியமைச்சர் லிம் குவால் எங் கூறினார்.
அந்த நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் பொறுப்புகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து அடுத்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுசெய்யப் படும். டோல் கட்டணத்தை முற்றாக அகற்றுவது அல்லது கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும்.
நிதியமைச்சு, பொருளாதார விவகாரத்துறை அமைச்சு, பொதுப்பணி அமைச்சு ஆகிய வற்றின் கருத்துகள் கேட்கப்படும். அந்த அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.