176 பேர் பலி!
துபாய் –
உக்ரேன் நாட்டு விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அதில் தீப்பற்றியிருந்தது என்று புலன்விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் தீப்பற்றி எரிவதை தரையிலிருந்து பலர் கண்டுள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில் அது விழுந்து நொறுங்கியது என்று ஈரானின் பொது வான்போக்குவரத்துத்துறையின் புலன்விசாரணையாளர்கள் கூறினர்.
அவ்வேளையில், அந்த விமானத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் விமானிகளும் உக்ரேன் விமானத்தில் நெருப்பு பற்றியிருப்பதைக் கண்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.
உக்ரேன் ஏர்லைன்ஸ் விமானத்தைச் சேர்ந்த போயிங் 737- 800 வகையைச் சேர்ந்த அந்த விமானம், இமாம் கோமேனி விமான நிலையத்திலிருந்து உக்ரேன் தலைநகர் கியேவை நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதிலிருந்த நூற்று எழுபத்தாறு பேரும் உயிரிழந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் ஈரான், கனடா மற்றும் உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பயண விவரங்களும் விமானியின் இறுதி நேர குரல் பதிவும் கொண்ட அப்பெட்டிகள் போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ ஒப்படைக்க முடியாது என்று ஈரானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.