போர்ட்டிக்சன் –
நெகிரி செம்பிலான், சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வகுப்பறை நடைபாதையில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துகளும் வாசகங்களும் நேற்று முன்தினம் அழிக்கப்பட்டன.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மூன்று தரப்பின் சந்திப்பின்போது ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ மு.ரவி கலந்துகொண்டு இந்தத் தமிழ் எழுத்துகளை அகற்றும்படி கேட்டுக் கொண்டார் .
இதைத் தொடர்ந்து அந்த தமிழ்ப்பள்ளியின் தரையில் எழுதப்பட்டிருந்த தமிழ் எழுத்துகள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டன. இதன் வழி நாட்டில் நிலவி வந்த இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இப்பிரச்சினை சமூக வலைத்தளங்களிலும் புலனக்குழுக்களிலும் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து இப்பள்ளிக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நேரடியாகச் சென்ற டத்தோ ரவி, அந்தப் பள்ளியின் நிலைமையைக் கண்டறிந்தபின் பள்ளி நிர்வாகம், பெ.ஆ.சங்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பின் வழி இதற்கு ஒரு தீர்க்கமான முடிவைக் காணுமாறு பள்ளி நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டார்.