வோக்மார்சன் –
ஜெர்மனியின் மேற்கு நகரான வோக்மார்சனில் கேளிக்கை விழாவொன்றில் கலந்து கொண்டிருந்தவர்களை ஆடவன் ஒருவன் காரைக் கொண்டு மோதியதில் முப்பது பேர் காயமுற்றனர்.
அவர்களுள் பலர் குழந்தைகள் ஆவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்த ஆடவனின் நோக்கம் என்பது தெரியவில்லை என்றும் அவர்கள் கூறினர். அக்காரை ஓட்டிய இருபத்தொன்பது வயதான ஜெர்மன் குடிமகன் கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்நபர் வேண்டுமென்றே பொதுமக்களை காரினால் மோதித் தள்ளியிருக்கிறான் என்று காவல்துறையின் பேச்சாளர் ஹென்னிங் ஹின் குறிப்பிட்டார்.
வெள்ளி நிறத்திலான அந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். காயமடைந்த முப்பது பேரில் கிட்டத்தட்ட பத்து பேர் குழந்தைகள் ஆவர். அவர்களுள் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கேளிக்கை விழாவில் நடைபெற்ற பேரணியின்போது அச்சம்பவம் நடைபெற்றது.