ஜெருசலேம் –
இஸ்ரேலில் கடந்த ஏப்ரல், செப்டம்பர் மாதம் நடந்த 2 பொது தேர்தல்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டதால் 3ஆவது முறையாக அங்கு பொதுத்தேர்தல் நடந்தது. இஸ்ரேலில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடந்தது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 120 இடங்களில் 61இல் வெற்றி பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும். இஸ்ரேலில் நீண்டகாலமாக பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி, எதிர்த்து போட்டியிடும் ப்ளூ அண்ட் ஒயிட் கட்சியின் தலைவரும் முன்னாள் ராணுவ தளபதியுமான பென்னி கன்ட்ஸ் ஆகியோர் தலா 35 இடங்களை கைப்பற்றினர்.
இவர்கள் மற்ற கட்சியினருடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தோல்வியில் முடிந்தது. இதனால் கடந்தாண்டு செப்டம்பரில் அங்கு மீண்டும் பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் ஆளும் லிகுட் கட்சி 32 இடங்களையும், ப்ளூ அண்ட் ஒயிட் 33 இடங்களையும் பிடித்தது. ஆனால் 2ஆவது முறையாக கூட்டணி அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனால் அங்கு 3ஆவது முறையாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் வரலாற்றில் இதுபோல் ஓராண்டுக்குள் 3ஆவது முறையாக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது இல்லை. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 64 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க 10,631 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் முடிவுகள் வெளியாகும்.