இஸ்லாமாபாத், மார்ச் 17-
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 127 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீவிரமான தடுப்பு வழிமுறைகளையும் நடை முறைப்படுத்தி வருகிறது. மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களை ஏப்ரல் 5 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.