புதுடெல்லி, மார்ச் 19-
உலகையே முடக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கொடூர கரங்களை பரப்பி வருகிறது. மராட்டியம், டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் என பல மாநிலங்களில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது.
இந்தியாவில் நேற்று முன்தினம் மாலை வரை இந்த ஆட்கொல்லி வைரசின் கரங்களில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 166 ஆக இருந்தது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மேலும் 14 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் நாட்டில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாட்டினர் ஆவர். வைரஸ் தாக்கியவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்புடைய 5,700-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தாக்கியவர்களில் மராட்டியம், கேரளா, உத்தரபிரதேசம் மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகம் ஆவர். அந்த வகையில் மராட்டியத்தில் 42, கேரளாவில் 27, உத்தரபிரதேசத்தில் 16, கர்நாடகாவில் 11, தெலுங்கானாவில் 6 பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போல உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் குழுவில் இடம்பெற்று இருந்த இளம் டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சக டாக்டர்கள் தெரிவித்தனர்.