போகோடா –
மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அங்கு இந்தக் கொடிய வைரசால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுக்க அந்நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி அங்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் நாடு தழுவிய தனிமைப் படுத்தல் தொடங்குகிறது. இது 19 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் பல்பொருள் அங்காடி ஊழியர்களைத் தவிர்த்து மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைநகர் போகோடாவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய சிறையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின்போது திடீர் கலவரம் வெடித்தது. இதைப் பயன்படுத்தி கைதிகள் பலர் சிறையை உடைத்து தப்பி ஓட முயற்சி செய்தனர்.
இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து சிறையில் கலகத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் கைதிகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சுடு நடத்தினர்.
இதில் கைதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 83 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்ட போலீசாரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.