கொரோனாவிலிருந்து ஒரு லட்சம் பேர் மீட்ட ஜெர்மனி

ஜெர்மனியில் வைரசின் தாக்கம் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

பெர்லின்,ஏப்ரல் 24-

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 27 லட்சத்து 10 ஆயிரத்து 89 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 17 லட்சத்து 76 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 675 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 101 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் உலகம் முழுவதும் 7 லட்சத்து 43 லட்சத்து 510 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் இங்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்த படியாக கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளன.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் மிகவும் முக்கியமான நாடான ஜெர்மனியில் வைரசின் தாக்கம் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஜெர்மனி வெற்றி பெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பரவும் தொடக்க நிலையிலேயே அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டன. சமூக இடைவெளியை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜெர்மனியில் கொரோனா பரவியவர்கள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட்டுள்ள ஒரு செயலியின் மூலம் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு எல்லாம் மேலாக அந்நாட்டில் வைரஸ் பரிசோதனை அதிக அளவில் நடத்தப்பட்டு சிறப்பான முறையில் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெர்மனியில் கொரோனா பரவியவர்களில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 20 லட்சத்து 72 ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 784 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 43 ஆயிரத்து 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 2 ஆயிரத்து 908 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 404 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், ஜெர்மனியில் இருந்த கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 300 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here