கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. இதனால் சினிமா துறையும் முற்றிலும் முடங்கிவிட்டது. சினிமாவை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் வேலை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே பெப்சி சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறையினருக்கு உதவும் விதமாக 1500 குடும்பங்களுக்கு சுமார் 24 டன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை ரஜினி வழங்கியுள்ளார். இதை இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், சின்னத்திரை நடிகர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்களுக்கு அவர் கொடுத்துள்ளார்.
ரஜினி இந்த உதவி பொருட்களை வழங்கும் போது மீடியாவுக்கு எந்த செய்தியும் கொடுக்க வேண்டாம் என்று தான் கூறினாராம். ஆனால் அதையும் மீறி இயக்குனர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது பற்றி இயக்குனர் பேரரசு ட்விட்டரில், “ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்! இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது ‘பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்’ என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!” என அவர் தெரிவித்துள்ளார்.