அமெரிக்காவில் கொரோனா சோகம் தொடர்கிறது – 24 மணி நேரத்தில் 2,500 பேர் பலி

24 மணி நேரத்தில் 2,500 பேர் பலி
வாஷிங்டன், மே 01-
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பிடியில் அமெரிக்க வல்லரசு சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அந்த நாடு தொடர்ந்து கொரோனாவின் பிடியில்தான் இருந்து வருகிறது.
கடந்த 26, 27-ந் தேதிகளில் பலி எண்ணிக்கை சற்றே குறைந்தது. ஆனாலும் அதன்பின்னர் மீண்டும் பலி அதிகரிக்கத் தொடங்கி இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) 24 மணி நேரத்தில் அங்கு 2,502 பேர் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தீவிர சிகிச்சை செய்து கொண்டும், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது அமெரிக்க மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
இதன்மூலம் அங்கு கொரோனாவுக்கு மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை கடந்து விட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முதலில் தனது நாட்டில் அனேகமாக 60 ஆயிரம் பேர் வரைக்கும் கொரோனா வைரசுக்கு பலியாகக்கூடும் என கணித்திருந்தார். அவரது கணிப்பை கொரோனா வைரஸ் தவிடுபொடியாக்கி தொடர்ந்து அமெரிக்கர்களின் உயிரைப்பலி வாங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
முதலில் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை பலியாகக்கூடும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டெபோரா பிரிக்ஸ் கணித்திருந்தார்.
ஆனால் தொற்றுநோய் மாதிரிகளை வைத்து பார்த்தால், கொரோனாவுக்கு அமெரிக்காவில் 22 லட்சம் பேர் வரையில் கொரோனாவால் உயிரிழக்கக் கூடும் என்று தகவல்கள் கூறின. இதை டிரம்ப் பல முறை சுட்டிக்காட்டி, பலி குறையும் என நம்பிக்கை தெரிவித்து வந்தார். 22 லட்சம் பேர் வரை பலியாகக்கூடும் என மாதிரிகள் கூறியதைத் தொடர்ந்துதான் பல லட்சம் உயிர்களை காப்பாற்றி உள்ளதாக டிரம்ப் கூறி வந்தார்.
இதுபற்றி அவர் கடந்த 20-ந் தேதி குறிப்பிடுகையில், “நாம் சரியான காரியங்களைத்தான் செய்தோம். நாம் அப்படி செய்யாதிருந்திருந்தால் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை இறந்திருப்பார்கள்” என்று கூறியது நினைவுகூரத்தக்கது. அப்போதுதான் அவர் இப்போது பலி 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை நிகழக்கூடும் என கூறினார்.
அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் இப்படியே தொடர்வது உறுதி, வேலையின்மை விகிதம் போலவே இதுவும் உயரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. அங்கு நோய் எதிர்ப்பு சக்தி, தொற்று விகிதாசாரம் ஆகியவற்றை விட இறப்புவீதத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுபற்றி மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மருத்துவ வரலாற்று மையத்தின் இயக்குனர் ஹோவர்டு மார்க்கல் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவில் கொரோனா பற்றி வெளியாகி வருகிற தரவுகள் அனைத்தும் ஒரு பெரிய புதிராகவே இருக்கின்றன” என்று குறிப்பிட்டார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் அன்னன்பெர்க் பொது கொள்கை மையத்தின் இயக்குனர் கேத்லீன் ஹால் ஜேமீசன், “டிரம்பும், அதிகாரிகளும் இறப்பு எண்ணிக்கையில் கவனம் செலுத்துவது எளிமையானது. ஏனென்றால் இது முழுமையற்றது” என்று கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here