கோம்பாக் –
அரசாங்கம் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குக் கட்டுப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அச்சமயங்களில் திருடர்கள் பூட்டியிருந்த கடைகளில் இருந்து எரிவாயு கலன்களைத் திருடியுள்ளனர். கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் கோம்பாக் மாவட்ட காவல்துறை மூன்று மலாய் ஆடவர்களைக் கைது செய்தது என்று கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. அரிஃபாய் பின் தராவி தெரிவித்தார்.
திருடப்பட்ட எரிவாயு கலன்களைப் போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்காக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கோம்பாக் மாவட்டத்தில் உள்ள கார் கழுவும் மையத்திலிருந்து ஐந்து இந்திய ஆடவர்கள் அப்பொருட்களைத் திருடிக் கொண்டு ஒரு லோரியில் ஏற்றிச் செல்வதைக் கண்டு காவல் துறைக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோம்பாக் மாவட்ட காவல்துறையினர் பத்துகேவ்ஸ் தாமான் சமுத்ராவில் வீடொன்றில் சோதனை மேற்கொண்டு ஓர் இந்திய முஸ்லிம் ஆடவரைக் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்தத் திருட்டுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லோரி கைப்பற்றப்பட்டது. மேலும் 4 ஆடவர்களைக் காவல்துறை தேடி வருகின்றது என்று ஏ.சி.பி. அரிஃபாய் தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி பகல் 2.30 மணியளவில் மேடான் பத்துகேவ்ஸில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட நபரை சோதனை செய்ய முயன்றபோது அந்நபர் தப்பிக்க மோட்டாரை வேகமாகச் செலுத்தினார். காவல்துறையினர் அவரை விரட்டிக் கைது செய்தனர்.
அவன் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், கம்போங் லெட்சுணமாவில் ஒரு வீட்டைச் சோதனை செய்து அந்த வீட்டில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் பாகங்களைக் கண்டெடுத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோம்பாக் மாவட்ட காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர் என்று ஏ.சி.பி. அரிஃபாய் தெரிவித்தார்.