கோலாலம்பூர்:
மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் அச்சுறுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் மிகையாகப் பாதிக்கிறது கோவிட் -19 தொற்று.
சுற்றுலா பேருந்து உரிமையாளர்கள் இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளை நாட்டின் அழகான சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலம், நாட்டின் உள்ளூர் சுற்றுலாத் துறையை உயர்த்த உதவுகின்றனர்.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு டிசம்பரிலிருந்து கோவிட் -19 தொற்று பரவியதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் புரட்டிப்போடப்பட்டிருக்கிறது என்பது உண்மை. இது பயணத் துறையை மண்டியிடச்செய்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.
மலேசிய நாட்டில் 10,000 க்கும் அதிகமான சுற்றுலா பேருந்து நடத்துநர்கள் இருக்கின்றனர். தொழில் மேன்மமைக்கு இவர்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தத்தில் கவலையடைந்திருக்கின்றனர்.
சுற்றுலாத்துறை முடங்கிக் கிடப்பதால் , கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள பெரும்பாலான பேருந்து நடத்துநர்கள் கிட்டத்தட்ட திவால் நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். இதற்கு நிதி அமைச்சகம் பேருந்து நிறுவனங்களுக்கான வங்கிக் கடனை ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் வரை குறைக்கும் வகையில் தலையிட வேண்டும். தற்போதைய நிலவரம் தொடர்ந்தால் பெருந்து நிறுவனங்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களில் மூட நேரிடும் என்று பேருந்து உரிமையாளர்கள் கூறுமின்றனர்.
இந்நிலையில் பேருந்துகளை விற்க விரும்பினாலும், யாரும் வாங்கப் போவதில்லை. அதன் தேய்மானம் ஒவ்வொருநாளும் கணக்கிடப்படுவதாக இருக்கிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கடனைச் செலுத்தியே ஆக வேண்டும் என்பதால் பேருந்துகள் சேவையிலேயே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது.