கத்தார் நாட்டில் ஒரே நாளில் 1733 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் 55,000 டாலர் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே புரட்டி எடுத்து வரும் கொரோனா நோய் தொற்றுக்கு அஞ்சி ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் அளவுக்கு புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் 30 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அரபு நாடான கத்தார் நாட்டின் அரசு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மெகா அபராத முறையை கையில் எடுத்துள்ளது.
கத்தாரில் இதுவரை 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 1733 பேருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதியானதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகின்றது கத்தார் அரசு.
அதன்படி கத்தாரில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் இன்றி வீட்டில் இருந்து வெளியே வரும் நபருக்கு அபராதமாக 55,000 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கத்தாரில் தங்கி வேலைபார்த்து வருகின்றனர். அப்படி இருக்க அவர்கள் முகக்கவசத்தை மறந்து வெளியே சென்று சிக்கினால் வாழ்நாளில் அவர்கள் சம்பாதித்த மொத்த தொகையையையும் ஒற்றை மாஸ்க்குக்காக அபராதமாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.