ஒன்றைச் செய்கின்றபோது அதன் பிரதிபலன் அறிந்து செய்தல் நலமாகக் கருதப்படுகிறது. செய்யும் காரியங்கள் பிறருக்கு உதவும் என்றால் அதனால் யாருக்கும் தீங்கு இருக்காது. இறைச்செயலாக மதிக்கப்படும். செய்யும் காரியங்களால் தீங்கு இருக்குமானால் அதனால் கேடுகள் மிகுதியாகும்.
கேடு விளையும் என்று தெரிந்தும் செய்வது கேடினும் கேடாக அமைந்துவிடும். அப்படித்தான் பலர் செய்தார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள்.
இனி, எதிர்காலத்தும் இப்படி நடவாது என்பதில் பலரின் மனம் பக்குவப்படவில்லைபோல் இருக்கிறது. மக்கள் சிலரின் நடத்தைகள் அதைத்தான் காட்டுகின்றன. இது அறியாமை அல்ல. எதிர் நீச்சல்.
துயர் நிறைந்த காலத்தில் நல்ல காரிங்கள் வேண்டாமே என்று எத்துணை சொன்னாலும் அது ஒரு பொருட்டாக இல்லை. இது ஆரோக்கியமான குண உணர்வைக் காட்டவில்லை. இன உணர்வைத்தான் காட்டுகிறது.
இன உணர்வு என்பதன் அர்த்தம் வேறு. இதை அனர்த்தம் ஆக்கிவிடவும் கூடாது. சிலவற்றைப்பதிவிடுவது நல்லதாக இருக்குமல்லவா! இனம் என்பது எதிர்ப்பு காடும் பிரிவாகும். இவர்கள் நியாயம் உணராத வகையினர்.
இந்தியர்கள் ஜாதகம் பார்ப்பதை ஒரு மரபாகவே கொண்டிருக்கின்றனர். இது சரியா? முறையா என்பதில் அக்கறையில்லை. இது, அவரவர் விருப்பம். ஜாதகத்தில் தோஷம் என்றால் திருமணைத்தை ஒத்திவைக்கின்றனர். குடும்பத்திற்கு நல்லது என்று கூறுவதை நம்பி திருமணத்தை ஒத்தி வைக்கின்றவர்களே அதிகம். ஜாதகத்தை மீறி செய்யும் துணிச்சல் மக்களுக்குக் கிடையாது. அப்படியானால் எதன்மீது பயம்?
ஜாதகம் உண்மையா என்பதை எவரும் ஆய்வு செய்யப்போவதில்லை.. அதற்காக பேராசிரியர்கள் பட்டமும் பெரும்பாலும் இருக்காது . தனி மனிதனாய் அவர்கள் சொல்வதை நம்புகின்றனர். நல்ல காரியங்கள் செய்வதை தேவை கருதி ஒத்தியும் வைக்கின்றனர்.
இதே செய்தியை அரசாங்கம் சொல்லியிருக்கிறது. காலம் கனியும் வரை திருமணம் செய்ய வேண்டாம் என்ற காரணத்தைக் கூறியிருந்தும் அதைக்கடைப்பிடிக்கவில்லை என்றால் மருத்துவத்தை, அரசாங்கத்தை விட புரோகிதர் சொல்வதுதான் சரியா? கொரோனா எப்போது தீரும் என்றும் அவர்கள் சொல்லியிருக்கலாம் அல்லவா?
ஜாதகம் பொய் என்பதல்ல வாதம். நல்ல முகூர்த்தம் என்பதற்கு விளக்கமும் நாட்டின் துன்பமும் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் வருத்தம்.
பன்னெடுங்காலத்திற்கு முன்பே தொற்று நோய்கள் பற்றிய செய்திகள் இருப்பதும் ஜாதகத்தில் இருக்கிறது என்கிறார்கள். அப்படியென்றால் ஜாதகம் என்ற கணிதம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்பது நம்பகமானதே.
அதே ஜாதகத்தால் ஒரு திருமணம் பலருக்குத் தீங்காக அமைந்திருக்கிறது. திருமணத்தின் புனிதம் சிதைந்து, தண்டனை என்றாகிவிட்டது.
பொறுத்திருந்தால் என்ன மூழ்கிவிடப்போகிறது? ஆக்கப்பொறுத்தவர்கள் ஆறப்பொறுதிருந்தால் என்ன நட்டமாகிவிடப்போகிறது. ஆலயத்தின் பொறுப்பாளர்களும் பொறுப்பாளர்களாக நடந்துகொள்ளவில்லை என்பது மெளனத்தின் கண்ணீராகவே இருக்கிறது.