இருக்கும்போது ஏதும் பெரிதாகத் தெரியாது. அது இல்லாதபோதுதான் அதன் அருமை உணரப்படும் என்பதைக் கோவிட் -19 நன்றாகவே உணர்த்தியிருக்கிறது.
உறவுகளின் பிரிவுகள், மனைவி பிள்ளைகள், பெற்றோர் என்றெல்லாம் இந்தக்கணக்கில் இருக்கின்றன.
இந்தப் பிரிவினை தற்காலிகமானதுதான் என்பது ஆறுதலுக்காகச் சொல்லப்பட்டது என்றாலும் பாதிப்புகள் இருக்கின்றன என்பது மிகத்தெளிவு.
பிரிவினை, பிரித்து மட்டும் வைக்கவில்லை. பிரிவினை துன்பத்தையும் கொடுத்திருக்கிறது. நெருங்க முடியாமல் செய்திருக்கிறது. இது துன்பம் தருகின்ற பிரிவுதான். ஆனாலும் அர்த்தமுள்ளது.
தொழில்கள் பாதிப்படைந்தன, வருமானம் இல்லை. கல்வி தொடரப்படவில்லை. அரசும் கைவிடவில்லை. அந்த நமபிக்கையில் பிரிவுகள் இருந்தன. அதனால் அதிக பாதிப்பு உணரப்படவில்லை.
முடிதிருத்தும் தொழிலும் அப்படித்தான். அத்தொழிலில் ஆள் பற்றாக் குறைபற்றி பேசாத நாளில்லை. அறிக்கை சமர்ப்பித்து அலுத்துப்போய்விட்டது. யாரும் மதிக்கவில்லை. எவர் காதிலும் ஏறவில்லை. உணவகங்களும் அப்படித்தான் இருந்தன.
கொரோனா காலத்தில் உணவகத் திறப்பும், முடிதிருத்தகமும் இல்லாமல் போனபோதுதான் அதன் அருமை புரிந்தது. இவ்விரண்டின் பயன்பாடு பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஒன்று பசி, மற்றொன்று தலைபாரம்.
பசிக்கு ஓரளவு வழி கிடத்தது. தலைக்கு வழியில்லாமல் போனது. முடிதிருத்த வழியில்லை. முடி வளர்சியை அரசும் தடுக்க முடியவில்லை.
வளர்ந்துவிட்டபின்தான் புரிந்தது முடிதிருத்தும் தொழிலின் பெருமை. இத்தொழிலை எல்லோராலும் செய்ய முடியாது என்பதைக் கோவிட்-19 உணர்த்தியிருக்கிறது. கோவிட் மீது கோபம் வேண்டாம் என்றுதான் கூறவேண்டும் போலிருக்கிறது.