கொரோனாவை தடுப்பதற்கு பதில், ஆட்சியாளர்களின் தவறால் இந்தியா தவறான ஓட்டப்பந்தயத்தில் முன்னேறி கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டுவதற்கு ஆட்சியாளர்களின் தவறு தான் காரணம் என்றும் அவர் புகார் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு குறைவதற்கு பதில், அதிகரித்து கொண்டே செல்வதால் பிற நாடுகளை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறியதை சித்தரிக்கும் வரைப்படக் காட்சிகளையும் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு மோசமாக இந்தியா இலக்காகி வருவதை சுட்டிக்காட்டியும், மத்திய அரசை விமர்சித்தும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் 4 கட்ட ஊரடங்கில் கொரோனா பாதிப்பு உயர்ந்த விதத்தை காட்டும் வரைப்படத்தையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் “தவறான பந்தையத்தில் வெற்றி பெறும்பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. ஆட்சியாளர்களின் பிடிவாதம், ஆணவம் மற்றும் திறமையின்மையின் கலவையின் விளைவாக ஏற்பட்ட ஒரு பயங்கரமான சோக நிகழ்வு” எனத் தெரிவித்துள்ளார்.