2020 மே மாதம் வரை வேலை இழந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சொக்சோ தொழிலாளர் காப்புறுதி செயல் திட்டத்தின் வாயிலாக 103 மில்லியன் வெள்ளி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுத் தாக்கத்தினால் பொருளாதாரச் சுமையை எதிர்நோக்கியுள்ள சுற்றுலாத்துறை, ஹோட்டல் துறை உட்பட பல்வேறு தொழில்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகின்றது.
மேலும் வேலை இழந்தவர்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தும் வகையில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் வேறு துறைக்குச் செல்லவும் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே சிறுநீரக சுத்திகரிப்பு மையம் ஒன்றையும் அமைக்க சொக்சோ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆண்டுதோறும் சொக்சோ அமைப்பின் வாயிலாக சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
கடந்த ஆண்டு இந்தச் சிகிச்சைக்காக மொத்தமாக 278.07 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது. கடந்தாண்டு அதன் செலவுகள் 290.81 மில்லியன் வெள்ளியாக உயர்ந்துள்ளது.
எனவே வடக்குப் பிராந்தியத்தில் குறிப்பாக பேராக் மாநிலத்தில் சொக்சோ அமைப்பின் சிகிச்சை மையம் திறக்கப்படுவது துரிதப்படுத்தப்படும். இதற்கிடையே முன்னதாக மலாக்காவில் உள்ள சிகிச்சை மையத்திற்கு வரும் நோயாளிகளுள் 30 முதல் 35 விழுக்காட்டினர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர் என்றும் நேற்று விஸ்மா பெர்கெசோவில் நடைபெற்ற பெர்கெசோ வாரியக் குழு உறுப்பினர்கள் பதவி நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற அவர் கூறினார்.