வடசென்னை மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக தென் சென்னை, வட சென்னை என இருந்தபோது அதன் வடசென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர் எல்.பலராமன். தற்போது திமுக தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்தார். துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டபோதும், அன்பழகன் போட்டியிட்டபோதும் சிறப்பாகச் செயலாற்றியவர்.
வைகோ திமுகவிலிருந்து பிரிந்தபோது வடசென்னையில் பெரும் பாதிப்பு கட்சிக்குள் ஏற்பட்டது. அப்போது மாவட்டச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி தலைமையின் பாராட்டைப் பெற்றவர். இந்நிலையில் பலராமனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.