நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 தொற்று நோயைத் தொடர்ந்து நாட்டு மக்கள் அந்த கொடூர நோயின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொது இயக்கத்தினர் பலவழிகளில் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
ம.இ.காவும் தங்களால் முடிந்த உதவிகளை நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. நேற்று காலையில் போர்ட்டிக்சன் பெரிய சந்தையில் முன்னாள் தேசிய மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி ஏற்பாட்டில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு முகக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
அதே சமயத்தில் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு பெரிய சந்தைக்கு வருகைப் புரிந்த தந்தைமார்களுக்கு டத்தோ மோகனா முனியாண்டி ரோஜாப் பூக்கள் வழங்கி மகிழ்வித்தார்.
இந்த முகக்கவசம் வழங்கும் நிகழ்வில் ம.இ.கா. நெகிரி மாநில தொடர்புக்குழுத் தலைவரும், போர்ட்டிக்சன் தொகுதி தலைவருமான டத்தோ எம்.வேலு, போர்ட்டிக்சன் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஆர்.பாலகிருஷ்ணன், ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதி தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜேந்திரன், ம.இ.கா. தலைவர் சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இலவச முகக்கவசத்தை வழங்கினர்.










