தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸார் அஸிஸான் ஹருன் தமது பதவியிலிருந்து விலகினார்.
கடந்த ஜூன் 29ஆம் தேதியிலிருந்து அவருடைய பதவி விலகல் அதிகாரப்பூர்வமாகியுள்ளது. கூட்டரசு அரசியல் அமைப்பு சட்டத்தின் படி அடுத்த தலைவர் தேர்வு செய்வதற்கு இடையில் அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம் முழு பணிகளை கவனித்துக் கொள்வார்.
அஸாரின் பதவி விலகல் கடிதம் கடந்த ஜூன் 30ஆம் தேதி மாமன்னர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தது.
தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ அரிஃப் யுசோப் துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகியோருக்கு பதிலாக அஸார் மற்றும் முன்னாள் அமைச்சர் அஸாலினா ஒத்மான் ஆகியோர் அப்பதவிகளில் அமர வைக்கும் தீர்மானம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இந்த தீர்மானத்தை சமர்பித்ததாக கூறப்படுகிறது. அதோடு இத் தீர்மானத்தை விவாதம் ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நடைபெறும் என டான்ஸ்ரீ அரிஃப் கூறியுள்ளார்.





















