இணையத்தின் மூலம் சூதாட்டம் நடத்தி வந்த கும்பலை வங்சா மாஜூ மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
இங்குள்ள ஜாலான் துன் ரசாக் யூதான்ட் எனும் இடத்தில் இன்று மதியம் 2.30 மணியளவில் 33 போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
அங்குள்ள ஓர் சொகுசு வீட்டில் இருந்த 42 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஐவர் மட்டுமே உள்நாட்டை சேர்ந்தவர்களாவர். மற்றவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து பல வகையான 95 கைப்பேசிகள், 42 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த சொகுசு வீட்டை 50ஆயிரம் வெள்ளிக்கு வாடகைக்கு எடுத்து கடந்த ஒரு மாதக் காலமாக இணையத்தின் மூலம் சுதாட்டத்தை நடத்தி வந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வரை லாபம் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள் ஃபோரெக்ஸ் விற்பனையிலும் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் வங்சா மாஜூ காவல் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இது போன்ற கும்பல் பொதுவாக அடுக்குமாடி சொகுசு வீடுகளை தான் தேர்வு செய்து செயல்பட்டு வருவர்.
ஆனால் முதல் முறையாக தூதரகங்கள் அமைந்திருக்கும் இடங்களில் வீட்டை வாடகைக்கு எடுத்து சட்டவிரோத செயலில் ஈடுப்பட்டுள்ளனர். இருந்தாலும் போலீசார் அவர்களின் செயல்களை கண்காணித்து நடவடிக்கையும் எடுத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.