போதைப் பொருள் உட்கொண்டலோரி ஓட்டுநர் மோதிய விபத்து: காரில் இருந்த 5 மாத ஆண் குழந்தை மரணம்

கெடா, பாலிங்கில் இன்று அதிகாலை, போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக நம்பப்படும் ஒருவரால் ஓட்டப்பட்ட  லோரி   கார் மீது மோதியதில்  ஐந்து மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததாக, பாலிங் மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து அதிகாலை 12.20 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் வந்ததாக பாலிங் காவல்துறைத் தலைவர் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ கூறினார்.

ஜாலான் பாரு கூலிமில் உள்ள கம்போங் சாதேக் அருகே உள்ள சந்திப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார். கெரிக்கிலிருந்து குபாங்கிற்குச் சென்று கொண்டிருந்த 27 வயது நபர் ஓட்டி வந்த காரும், அவரது 41 வயது மனைவி மற்றும் குழந்தையும், அதே திசையில் கிளந்தானிலிருந்து பினாங்கிற்குச் சென்று கொண்டிருந்த 43 வயது நபர் ஓட்டி வந்த லோரியும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளன என்று சினார் ஹரியான் செய்தி நிறுவனம் அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தில் ஈடுபட்ட அனைவரும் காயமடைந்து சிகிச்சைக்காக பாலிங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது. சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் இருப்பது உறுதியானதை அடுத்து, மேலதிக விசாரணைக்காக லோரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிராண்டன் கூறினார்.

போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இக்குற்றத்திற்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், RM50,000 முதல் RM100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here