கோலாலம்பூர் –
கடந்தாண்டு நாட்டிலுள்ள பணி இடங்களில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட 13 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மனிதவள துணையமைச்சர் ஹாஜி அவாங் ஹசிம் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு பணி இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டை விட 8 விழுக்காடு குறைந்துள்ளது.
2018ஆம் ஆண்டு 1 லட்சம் தொழிலாளர்களில் 4.14 விழுக்காட்டினர் மரணமடைந்த வேளையில் 2019ஆம் ஆண்டு 1 லட்சம் தொழிலாளர்களில் 3.83 விழுக்காட்டினர் மரணமடைந்துள்ளனர் என தேசிய அளவிலான தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார வாரக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட அவர் குறிப்பிட்டார்.
மேலும் வேலை இடங்களில் நோய்கள் ஏற்பட்ட எண்ணிக்கையும் கடந்த ஆண்டு உயர்வு கண்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் 7,258 நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட வேளையில் 2019ஆம் ஆண்டு 9,860 நோய் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விழுக்காட்டின் மீது அரசாங்கம் இன்னும் முழுமையாக திருப்தி கொள்ளவில்லை.
பணி இடங்களில் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனில் அக்கறைக் கொள்வது அவசியமாகின்றது.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு பணியிடங்களில் ஏற்படும் அசம்பாவிதங்கள் பெருமளவில் குறைய வேண்டும் என்பதற்கு அனைத்துத் தரப்பினரும் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்த கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கிய கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகா, சொக்சோ அமைப்பு, இதர தரப்பினருக்கும் துணை அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.