பல குற்றச் செயல் விசாரணைகள் முழுமை பெறாமல் உள்ளன – அதிகாரிகளை சாடினார் ஐஜிபி

அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் முடங்கிக் கிடக்கும் பல வணிக குற்றச் செயல்களின் விசாரணைகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரச மலேசிய காவல் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தெரிவித்தார். ‘

பல்வேறு குற்றச் செயல்களின் விசாரணை அறிக்கைகள் பல ஆண்டுகளாகியும் இன்னும் முழுமை பெறாமல் உள்ளன. அவை அனைத்தும் மீண்டும் தூசி தட்டி வெளியில் எடுக்கப்படும்.

இன்னும் நிலுவையில் இருக்கும் வணிக குற்றச் செயல்களில் முக்கியமானவை அலைப்பேசியின் மூலம் மோசடி செய்வது தான். கடைமைகளை முறையாக செய்யாத அதிகாரிகளால் தான் இது போன்ற விசாரணைகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன.

வணிக குற்றத்திற்காக நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்தும் விசாரணை தொடங்கப்படாத வழக்குகளும் இங்கு உள்ளன என்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் வெளிப்படையாக கூறினார்.

இந்த வழக்குகளை விசாரிக்க சரியான அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எனவே முழுமை பெறாத பதிவுகள் மீண்டும் வெளியே கொண்டு வரப்படும். அதன் தொடர்பில் விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு ஒரு மாதம் மட்டும் தான் காலக் கெடு. அதற்குள் வழக்கின் விசாரணையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இணையம், அலைப்பேசிகள் மூலம் நடத்தப்படும் சூதாட்டங்களுக்கு காவல் துறை ஒருபோதும் அனுமதி வழங்காது. இவற்றை முற்றாக ஒழிக்கும் வரை தாம் போராட போவதாக அவர் கூறினார்.

தம்முடன் நல்ல முறையில் உறவை ஏற்படுத்திக் கொண்டு இணைய சூதாட்டத்தை நடத்த திட்டம் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இனி யாருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது.

போலீஸ் அதிகாரிகள் மத்தியில் இனி ஆடம்பரமான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. உயர் அதிகாரிகளுக்கு அலுவலகத்தில் அணிச்சல் வெட்டுவது, வெளியில் செல்வது போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் எச்சரித்தார்.

ஆயிரம் கணக்கில் பில் வரும் அளவிற்கு போலீஸார் வெளியில் சென்று கடல் உணவுகளை உன்னுகின்றனர். யார் இதற்கு பணம் செலுத்துவது? இது போன்ற கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் அதிகாரிகள் போலீஸ் துறையில் இருந்து நீக்கப்படுவர் என்று டான்ஸ்ரீ ஹமிட் பாடோர் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here