ஜாக்கர்த்தா,
மலேசியா மற்றும் இந்தோனேசியா இடையிலான வருடாந்திர உச்சி மாநாடு சந்திப்பில் பங்கேற்கும் வகையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று முதல் இரண்டு நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார்.
இந்த சந்திப்பு, இந்தோனேசியா அதிபர் பிராபோவோவுடன் நடைபெறும், அன்வாரின் முதல் வருடாந்திர உச்சி சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருடன் இணைந்து சரவாக் முதல்வர், சபா முதலமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் , கல்வியமைச்சர் ஆகிய முக்கிய தலைவர்களும் பயணித்துள்ளனர்.
“இந்த உச்சி மாநாடு சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான உயர்நிலை ஒத்துழைப்பு செயல்முறை எனப்படும் Annual Consultation உட்பட்ட முக்கிய நிகழ்வாகும். இது விவேகமான, விரிவான மற்றும் பல்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.” என இந்தோனேசியாவுக்கான மலேசிய தூதர் டத்தோ சைட் முகமது ஹஸ்ரின் தெங்கு ஹூசேன் கூறியிருக்கிறார்.
இந்த வருடாந்திர சந்திப்பு 2006ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளிலும் மாற்று முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, கல்வி போன்ற பல துறைகளில் அழுத்தமான அரசியல் உறவுகளை பிரதிபலிக்கிறது என தூதர் மேலும் தெரிவித்தார்.
இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் இந்த சந்திப்பில், பரஸ்பர நலன்கள், பிராந்திய மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்து ஆலோசித்து, சந்திப்பின் இறுதியில் சமூக கூட்டறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















