நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த மாதம் கால்முறிவு எற்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் வீட்டுக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் சம்பத் வீடு திரும்ப முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள மேம்பாலத்தின் அடியில் காலில் மாவு கட்டுடன் சம்பத் படுத்து கிடக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சிகிச்சை முடிந்து விட்டதாக கூறி என்னை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். ஆனால் பஸ் வசதி இல்லாததால் பாலத்திற்கு அடியில் படுத்து கிடக்கிறேன். பணம் இல்லாததால் உணவுக்கு வழியின்றி தவித்து வருகிறேன். காலில் மாவு கட்டு போடப்பட்டு உள்ளதால் என்னால் நடக்கவும் முடியவில்லை. என்னை குடும்பத்தினருடன் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.