பாறையிலுள்ள 6 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்

திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில் ஆடு மேய்க்கும் 12 வயது சிறுவன் ஆதித்யா இன்று காலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பொழுது அவருடைய கைபேசி பாறையின் இடுக்கில் விழுந்துள்ளது. அதனை எடுப்பதற்காக முயற்சித்த பொழுது, சிறுவன் அங்கிருந்த ஆறு அடி பள்ளத்தில் சரியாக 11.00 மணிக்கு உள்ளே விழுந்துள்ளார். அந்த சிறுவனோடு மேலும் நான்கு சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஆதித்யா திடீரென காணாமல் போனதை பார்த்து, அவனை தேடியுள்ளனர்.

அந்த சமயத்தில் ஆதித்யா பாறையின் உள்ளே சிக்கிக் கொண்டு குரலெழுப்பியது இவர்களுக்கு கேட்கவே, உடனடியாக ஆதித்யாவின் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அக்கம்பக்கத்தினர்  தாத்தையங்கார் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காவலர்கள் தீயணைப்புத்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அங்கு வரவழைத்தனர். பின்னர் அவர்கள் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்கள் கிட்டதட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் ஆதித்யாவை அவர்கள் உயிருடன் மீட்டனர். பாறையின் இடுக்கில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here