கோலாலம்பூர், ஜூலை 28-
“தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன் கடமை ஆற்றுபவர்கள் மிகவும் உன்னதமானவர்கள், போற்றுதலுக்குரியவர்கள் என்று மலேசிய முன்னேற்ற கட்சி(ஏம்ஏபி) தேசியத் தலைவர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருந்தபோது, மிகவும் பாதிப்புக்கு ஆளான நளிவுற்ற குடும்பங்களுக்கு உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாகச் சென்று வழங்கிய மலேசிய முன்னேற்றக் கட்சி(ஏம்ஏபி) உறுப்பினர்களையும் தன்னார்வ சேவையாளர்களையும் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
உலக அளவில் மனிதர்களுக்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா கிருமி பரவலைத் தடுக்கும் நோக்கில் மலேசிய அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடந்த மார்ச் மாதம் 18-ஆம் நாள் முதல் நடை முறைப்படுத்தியது.
அதுமுதல் வீட்டில் முடங்கிய ஏழை மக்கள், குறிப்பாக அன்றாட சம்பளம் பெறும் தரப்பினர், குறைந்த வருமானம் பெறுபவர்கள் என ஏராளமான இந்தியக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
அப்படிப்பட்ட தரப்பினருக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் பொன்.வேதமூர்த்தி வழிகாட்டலில் உணவுப் பொருள் வழங்கும் நடவடிக்கை தீபகற்ப மலேசியாவில் முடுக்கிவிடப்பட்டது. இந்த வேளையில், தங்களின் உயிரையும் சுகாதார அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள் வழங்கியவர்களை பாராட்டும் வகையிலும் சேவை மனப்பான்மை கொண்ட அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தலைநகர் ஏம்ஏபி தலைமையகத்தில் கடந்த வாரம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக, சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஏம்ஏபி தொண்டர்களும் அரசு சாரா அமைப்பினர்களுக்கும் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.