அமெரிக்காவில் இந்த ஆண்டு 3,80,000 வீடியோக்கள் நீக்கம்

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் விவரங்களை தானாகவே அபகரித்துக்கொள்கிறது.

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்வற்றை செயலி மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அமெரிக்க மக்களின், அதிகாரிகளின், ஒப்பந்ததாரர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதை கண்காணிக்கவும், மிரட்டவும் முடியும். இந்த அச்சுறுத்தலால் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவிடுகிறேன் என இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் கூறினார். இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாட்களில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்காவில், தனது நிறுவனத்தின் வெறுப்பு பேச்சு கொள்கையை மீறும் வகையிலான 3,80,000 வீடியோக்களை இந்த ஆண்டு டிக்டாக் நிறுவனம் நீக்கியுள்ளது.

இனவெறி அடிப்படையிலான துன்புறுத்தல்களை கொண்ட மற்றும் அடிமைத்தனம் போன்ற விசயங்களை உள்ளடக்கிய பதிவுகள் தங்களது நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் விசயங்களாகும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கட்டமைக்கப்பட்ட குழுக்களுக்கு அனுமதி இல்லை என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை வெளியிட்டதற்காக 1,300 கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here