அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோத ஊடுருவல் நடைபெறுகிறது என எல்லை பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் நாடியா நகரில் சந்தேகத்திற்குரிய வகையில் சிலர் ஊடுருவ முயன்றுள்ளனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். இதனால் அவர்களை துரத்திய போலீசார் பெண் ஒருவரை பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பியோடி விட்டனர்.
அவரிடம் எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தியதில், வங்காளதேச நாட்டை சேர்ந்த கலீதா ஷேக் (வயது 40) என்பதும் கடத்தல்காரர்களின் உதவியுடன் இந்தியாவுக்குள் அவர் ஊடுருவ முயன்றதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இந்தியாவுக்குள் சட்டவிரோத வகையில் ஊடுருவ முயன்ற வங்காளதேச பெண்ணை கைது செய்த பாதுகாப்பு படையினர், அவரிடம் இருந்து ஆதார், பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.