இந்திய அரசு வெளிநாட்டில் சிக்கிய இந்தியவர்களை ‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் சொந்த நாடு அழைத்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பணம் வசூலிக்கப்படுவதால் இது வணிக ரீதியிலான போக்குவரத்து போன்று உள்ளது. ஏர் இந்தியா மட்டுமே இதில் ஆதாயம் பெறுகிறது. எங்கள் நாட்டு விமான நிறுவனத்திற்கும் அனுமதி வழங்காவிடில் தடைவிதிக்க நேரிடும் என அமெரிக்க மிரட்டல் விடுத்தது.
இதனால் ‘ஏர் டிரான்ஸ்போர்ட் பப்பிள்ஸ்’ தற்காலிக அடிப்படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்பட ஆறு நாடுகளுக்கு இந்தியா இருநாட்டு விமான போக்குவரத்தை தொடங்கியுள்ளது. மேலும், 13 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்கள் அல்லது வசிக்கும் இந்தியர்கள் சொந்த நாடு திரும்ப வேண்டுமென்றால் அவர்கள் இருக்கும் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்கியுள்ள இடம், எங்கு செல்ல வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.
‘ஏர் பப்பிள்ஸ்’ முறைக்கும் அவ்வாறு இருந்தது. இந்நிலையில் ‘ஏர் பப்பிள்ஸ்’ மூலம் இந்தியா வர விரும்பும் நபர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.