துர்க்கி நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய தோட்டத் தொழில் மூலப் பொருள் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருடின் அமான் ரஸாலி தனிமைப்படுத்துதலை மீறி செயல்பட்டதற்காக அவர் மீது போலீஸ் விசாரணை மேற்கொள்ள விருப்பதாக தெரிய வந்துள்ளது.
குற்றவியல் புலனாய்வு மற்றும் சட்ட புலனாய்வுத் துறை துணை இயக்குநர் மியோர் ஃபரிடாலாத்ராஷ் வாஹிட் இந்த தகவலை பெர்ணாமிவிடம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் சுய தனிமைப்படுத்துதலை மீறிய கைருடின் மீது நாடு முழுவதும் கிட்டத்தட்ட 27 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
சட்டவிதிகளின் படி தனிமைப்படுத்துதலை மீறிய கைருடினுக்கு 1,000 வெள்ளி கம்பாவுன்ட் வழங்கப்பட்டதாகவும் அவர் அந்த தொகையை செலுத்தி விட்டதாகவும் மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இதன் தொடர்பில் மலேசிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு அமைச்சர் என்ற முறையில் கடந்த மே முதல் ஆகஸ்டு மாதம் வரை பெறும் சம்பளத்தை கோவிட் 19 உண்டியலுக்கு வழங்குவதாக கைருடின் கூறியுள்ளார்.