ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று (ஆக.29) திறக்கப்பட்டது தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். அச்சமயத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று (ஆக.29) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இன்று உத்ராட சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதை தொடர்ந்து 31-ம் தேதி திருவோண தின சிறப்பு வழிபாடு, 1-ம் தேதி அவிட்டம் நாள் சிறப்பு பூஜை, 2-ம் தேதி சதயம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 21-ம் தேதி வரை புரட்டாசி மாத பூஜை நடைபெறும்.
கொரோனா பரவலையொட்டி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கான தடை நீடிப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.