காபூல் –
ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற விமானத் தாக்குதலில் 37 தலிபான் பயங்கரவாதிகள் பலியான தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
ராணுவத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலை வைத்து பார்யப் மாகாணம் கய்சர் மற்றும் க் வாஜா சப்ஸ்போஷ் மாவட்டங்களில் புதன் அதிகாலை விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் இறந்தவர்களில் தலிபான்களின் முக்கிய கமாண்டர்களான முல்லா சாதிக், முல்லா பஷீர் மற்றும் பைசுல்லா ஆகியோரும் அடங்குவர். அத்துடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மாவட்டங்களில் உள்ள பாதுகாப்புப் படை சோதனைச் சாவடிகளை தாக்கும் பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் செயல்படும் தலிபான்களிடம் இருந்து இதுவரை எதிர்வினையாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.