இலங்கைக்கு தப்ப முயன்ற அகதி கைது

சொந்தமாக மிதவை தயாரித்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்குத் தப்ப முயன்ற இலங்கையைச் சேர்ந்த அகதியை ஏர்வாடி போலீஸார் கைது செய்தனர்.

இலங்கை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது அலி (43). இவர் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின்போது 2006-ம் ஆண்டில் விமானம் மூலம் தமிழகம் வந்துள்ளார். அவர் விசா காலம் முடிந்த பின்னரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் சட்ட விரோதமாகத் தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் நோக்கில், ஏர்வாடி கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்தி, தானே மிதவை ஒன்றைத் தயாரித்து, அதன் மூலம் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளார். இதை அறிந்த அப்பகுதி மீனவர்கள் ஏர்வாடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து ஏர்வாடி காவல்துறையினர் சின்ன ஏர்வாடி கடற்கரைக்குச் சென்றபோது முகம்மது அலி மிதவையுடன் தப்பிச் சென்றதும், அவருக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது அசன் (35), தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறைச் சேர்ந்த சாகுல் ஹமீது (29) ஆகியோர் உதவியதும் தெரிய வந்தது. அதனையடுத்து கடற்கரையில் நின்ற முகமது அசன், சாகுல் ஹமீது ஆகியோரை பிடித்தனர்.

பின்னர் உள்ளூர் மீனவர்களுடன் படகில் சென்று, நடுக்கடலில் வைத்து முகம்மதுஅலியைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து இந்தியா, இலங்கை பணம், பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறி முதல் செய்யப்பட்டன.

விசாரணையில், உடல் நிலை சரியில்லாததால் மருத்துவம் பார்க்க பணம் இன்றி இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றதாக அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட 3 பேரிடமும் கியூ பிரிவு மற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here