ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அம்ருல்லா சலே அலுவலகம் தரப்பில், ‘ஆப்கானிஸ்தானில் துணை அதிபர் சலேவுக்கு எதிராக எதிரிகள் இன்று மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தனர். ஆனால், அவர்களது மோசமான எண்ணம் தோற்றுவிட்டது. இந்தத் தாக்குதலில் சலேவின் பாதுகாவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துணை அதிபருக்கு இந்தத் தாக்குதலில் சிறிய அளவே காயம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து அம்ருல்லா சலே கூறும்போது, ‘எனக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. நானும் எனது மகனும் நலமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தற்கொலைப் படை தாக்குதலில் இரண்டு பேர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.