இந்தி மொழி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்கி, தன் மீது இந்தி திணிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி உதவி ஆணையர் பாலமுருகன் புகார் தெரிவித்தார். இப்புகாரை மறுத்து ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஊழியர் பற்றாக்குறை காரணமாக, சென்னை புறநகர் ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் உள்ள அலுவலக மொழி பிரிவில் அனைவருக்கும் கூடுதல் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பணி வழங்கப்படவில்லை. இந்தி பிரிவில், கூடுதல் பொறுப்புவகிக்கும் அனைத்து உதவி ஆணையர்களும், இந்தி பேசத் தெரியாத மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான். இதில், ஆய்வுக் கூட்டமும் ஆங்கிலத்தில்தான் நடக்கும்.
சென்னை புறநகர் ஆணையர் அலுவலகம், தமிழ் மொழியை வளர்ப்பதில் முன்மாதிரியாக திகழ்வதோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமையும் அளித்து வருகிறது. நாட்டிலேயே இந்த அலுவலகம்தான் ‘ஜிஎஸ்டி அகராதி’ என தமிழில் ஓர் அகராதியே வெளியிட்டுள்ளது. அத்துடன், சிறு, குறு மற்றும் நடுத்தர துறை பயன்படும் வகையிலும் தமிழ் அகராதியை வெளியிட்டுள்ளது.
இந்தியை திணிப்பதாகக் கூறும்அதிகாரி, மும்பையில் 8 ஆண்டுபணியாற்றியவர். இந்த அலுவலகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், குற்றம்சாட்டி உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.